மது அருந்தாத இளைஞரை பிரச்சிணையில் சிக்க வைத்த பிரீத் அனலைசர்- போலீசார் சோதனையில் ஏற்பட்ட பரபரப்பு!

போலீசார் சோதனையில் மது அருந்தாத இளைஞர் மது அருந்தியதாகக் காண்பித்த பிரீத் அனலைசர் கருவியால் இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.  சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து போலீசாருக்கான புதிய போலீஸ் பூத்தை சென்னை மாநகர போக்குவரத்து…

போலீசார் சோதனையில் மது அருந்தாத இளைஞர் மது அருந்தியதாகக் காண்பித்த பிரீத் அனலைசர் கருவியால் இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். 

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து போலீசாருக்கான புதிய போலீஸ் பூத்தை சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதன்பின்னர் செய்தியாளரை சந்தித்த கூடுதல் ஆணையர், போக்குவரத்து காவல் துறையினரின் பணி சவாலானது என்றும், சாலையில் நின்று பணியாற்றும் அவர்களுக்கு நல்ல பணி செய்ய வேண்டும் என்பதற்காக புறக்காவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்.

முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மூன்று எல்இடி தகவல் பலகை அமைக்கப்பட்டு போக்குவரத்து காவலர்களின் அறிவிப்புகளை தெரிவிக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் நேற்று இரவு வாகன சோதனையில் மது அருந்தாத நபரை சோதித்த போது, மது அருந்தியதாக பிரீத் அனலைசர் உறுதிபடுத்திய விவகாரம் தொடர்பாக, விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் இதுவரை நடந்ததில்லை என்றும், சுவாச
பரிசோதனை கருவிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட
சம்பவத்தில் நபர் கூறும் தகவல்கள் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
சென்னையில் 300 சுவாச சரிபார்ப்பு கருவிகள் இருப்பதாகவும் மேலும் 50 புதிய
கருவிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

கோடை காலம் துவங்கிய நிலையில் மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் வரை அரசு
நீர்மோர் வழங்கி வருவதாகவும், உடல்நிலைக்கு சரியில்லாத போக்குவரத்து
காவலர்களுக்கு இரவு மற்றும் லேசான பணிகள் வழங்கி வருவதாகவும், வெயிலில்
பணியாற்றுவது கடினமான வேலை என்றும் வார விடுப்பு அல்லாமல் தேவை இருப்பின்
அவர்களுக்கு விடுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.