ஜவளகிரி வனப்பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம நபர்களை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு காவிரி தெற்கு என இரு வன உயிரின சரணாலயங்கள் உள்ளது. இந்த வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து 200க்கும் மேற்பட்ட யானைகள் வலசை வருவது வழக்கம். அதுபோல் கடந்தாண்டு வலசை வந்த 200க்கும் மேற்பட்ட யானைகளை ஜவளகிரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு இடம் பெயர செய்தனர்.
இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள விளை நிலங்களில் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்தி வந்தது. தற்போது கர்நாடக மாநிலம் பன்னர் கட்டாவிலிருந்து யானைகள் ஜவளகிரி வழியாக வலசை தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஜவளகிரி காப்புகாடு கக்கமல்லேஸ்வரம் கோயில் பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 15 வயதுடைய ஆண் யானை ஒன்று உயிரிழந்து சடலமாக கிடந்தது.
இதனையடுத்து கால்நடை மருத்துவர் தன்னார்வு அமைப்பினர் முன்னிலையில் இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது யானையை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட வனபாதுகாவலர் கார்த்திகேயனி வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து யானையை துப்பாக்கியால் சுட்டுகொன்ற குற்றவாளிகளை பிடிக்க உத்திரவிட்டுள்ளார். அதன் பேரில் வனத்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.








