சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக உள்பட மேலும் சில கட்சிகள் இணைந்துள்ளது. இதனிடையே அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அதிமுக உடனான கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளை பாஜக கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.







