மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேப்பரை பார்த்து படித்து கொண்டிருந்த அதிமுக உறுப்பினரிடன், சபாநாயகர் அப்பாவு பேப்பரை பார்த்து படிக்காதிங்க என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, குறிப்பில்லாமல் படிக்க இது எக்ஸாம் அல்ல என்று கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மானியக்கோரிக்கை விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பேப்பரை வைத்து பேசிக்கொண்டிருந்த போது சபாநாயகர் அப்பாவு பேப்பரை பார்த்து படிக்காதீங்க என்று கூறினார். இதனால் அவையில் ஒரு விவாதம் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்பாவு: சட்டப்பேரவை தலைவராக பிடிஆர் பழனிவேல்ராஜன் இருந்த காலத்தில் பேப்பரை வைத்து கொண்டு பேச அனுமதிக்கமாட்டார். பேப்பரை பார்த்து படித்தால் நேரம் அதிகம் பிடிக்கும் என்பதால் பேப்பரை பார்க்காமல் படிக்க முயற்சி செய்யுங்கள்.
துரைமுருகன்: ஒருமுறை ஜோதியம்மாள் சட்டப்பேரவை தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த போது குடியாத்தம் துரைசாமியை பேப்பர் வைத்து படிக்க வேண்டாமென அறிவுறுத்தினார். அப்போது எழுந்த கருணாநிதி, குடியாத்தம் துரைசாமி சிறந்த பேச்சாளர், குறிப்பில்லாமல் மூன்று மணி நேரம் கூட பேசக்கூடியவர் என்பதால் அவரை தொடர்ந்து பேச அனுமதியுங்கள் என கூறினார்.அப்பாவு: குறிப்பு வைத்துக்கொண்டு பேசுவது தவறு என நான் சொல்லவில்லை. 4 பக்கங்களை ஒரு வரியில் பேசுவதை போல உறுப்பினர்கள் பேச முயற்சிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி: குறிப்பில்லாமல் பேசுவதற்கு இது எக்ஸாம் அல்ல. பொதுப்பணித் துறை முக்கியமான துறை என்பதால் அதில் ஏராளமான புள்ளி விவரங்கள் வரும். தவறான தகவல் எதுவும் அவையில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காகவே குறிப்பெடுத்து பேசுகிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு அறிவிருக்குமோ அது மாதிரி தான் பேசுவார்கள் எல்லாரும் அறிவாளியாக இருக்க முடியாது.
அப்பாவு: அறிவாளி என்பதற்காக நான் எதுவும் பேசவில்லை. பேப்பரை பார்க்காமல் பேசினால் தெளிவாக இருக்கும் என்பதாலும், சொல்ல வேண்டிய விஷயத்தை விரைந்து சொல்ல முடியும் என்பதாலே கூறினேனே தவிர வேறு எதுவும் தவறாக சொல்லவில்லை என்று கூறினார்.