தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன் வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஊரடங்கின்போது வெளியில் வந்து சென்னை சேத்துபட்டு சிக்னலில் காவலர்களுடன் வழக்கறிஞர் தனுஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து தலைமை காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில், சேத்துப்பட்டு காவல்துறை ஆறு பிரிவுகளின் வழக்கறிஞர் தனுஜா, அவரின் மகள் பிரித்தி மீது வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புகார்கள் பெறாமலேயே தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார் . மேலும், தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றி விடும் என்று மக்கள் நினைப்பதாக வேதனை தெரிவித்தார்.
வழக்கறிஞர் தொழில் ஒரு உன்னதமான தொழில் என்றும் வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் இன்று விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி ஒத்திவைத்தார்.







