வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை குறித்த புதிய அப்டேட்டை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை, கும்கி யானைகள் உதவியடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அரிக்கொம்பன் யானையை, நெல்லை மாவட்டம் அகத்திய மலை யானைகள் காப்பக வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் பலத்த பாதுகாப்புடன் நேற்று கொண்டு சென்றனர்.
துதிக்கை மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்ட அரிக்கொம்பன் யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறை மருத்துவ குழுவினர், பின்னர் அதனை அப்பர் கோதையாறு பகுதியில் அதிகாலை 2 மணிக்கு லாரியிலிருந்து இறக்கி விட்டனர். அரிக்கொம்பன் யானை கோதையாற்றில் தண்ணீர் அருந்த வந்தபோது, எடுக்கப்பட்ட பிரத்யேக வீடியோ வெளியாகியது. அகத்திய மலை வனப்பகுதியில் விடப்பட்ட அரிகொம்பன் யானை நலமுடன் இருப்பதாக வனத்துறையின் கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : ”உயர் பதவியில் உள்ள ஒருவருக்கு மட்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சி புரியவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இந்நிலையில் அரிக்கொம்பன் யானை குறித்த அப்டேட்டை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரிக்கொம்பன் யானை இன்று அதிகாலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வெற்றிகரமாக விடப்பட்டது. இந்த பழமையான வாழ்விடத்தில், அடர்ந்த காடுகளும், ஏராளமான நீர் இருப்பும் உள்ளது.
https://twitter.com/supriyasahuias/status/1666093170051158019
அரிக்கொம்பன் யானை சுறுசுறுப்பாக உள்ளது. நன்றாக உணவு உண்கிறது. ரேடியோ காலரில் இருந்து சிக்னல்கள் பெறப்படுகின்றன. 10 வேட்டை தடுப்பு காவலர்கள், 4 வன வரம்பு அலுவலர்கள் மற்றும் இரண்டு துணை இயக்குனர்கள் கொண்ட குழு, கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையில் யானையின் உடல்நிலை மற்றும் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.







