ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படும் என ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30-க்கு வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டாக் ரயில்வே காவல்துறையின் உதவி ஆய்வாளர் பப்பு குமார் நாயக் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இன்னும் அடையாளம் காணப்படாமல் 101 உடல்கள் உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அடையாளம் காணப்படாத உடல்களை டி.என்.ஏ சோதனை மூலம் கண்டறிய உள்ளதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். அதோடு அடையாளம் காணப்பட்ட உடல்களை சாலை மார்க்கமாக எடுத்து செல்ல மத்திய அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதற்கான செலவை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக ரயில்கள் மூலமாகவும் உடல்களை எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.