திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 6 வது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அண்ணா. ‘ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானர்கள்’ என்றார் நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய முத்தமிழறிஞர் கருணாநிதி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்மொழிக்கும் – இனத்துக்கும் – நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 6-வது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளை யிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவை வழங்கியுள்ளார்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் – ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.
எத்தனை சோதனைகள் – எத்தனை வேதனைகள் – எத்தனை பழிச்சொற்கள் – எத்தனை அவதூறுகள் – என திமுக மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. உங்களுக்கு உண்மையாக இருப்பேன். உங்களுக்காக உழைப்பேன். என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்.
இந்த வெற்றிக்கு உழைத்த கோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், கொள்கைவாதிகளின் கூட்டணியாகக் கழகத்தோடு இணைந்து தோள் கொடுத்த தலைவர்கள், அந்த இயக்கங்களைச் சார்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.
தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும்.கழகம் வென்றது – அதைத் தமிழகம் இன்று சொன்னது. இனித் தமிழகம் வெல்லும் – அதை நாளைய தமிழகம் சொல்லும். இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.