தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு ஆளுநர் ரவி போனாலும், எந்த நேரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சார்பில் கருப்புக்கொடி காண்பிக்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெர்மன் தத்துவ அறிஞர் கார்ல் மார்க்ஸ் குறித்து அவதூறாக பேசியதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை
தாங்கினார். மேலும் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்டக்குழு செயலாளர்கள், அக்கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படியுங்கள் : மகளிர் உரிமைத் தொகை குறித்து அறிவிப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “மார்க்ஸ் மற்றும் டார்வினை கடுமையாக விமர்சித்து அவதூறாக ஆளுநர் பேசியுள்ளார். அரைகுறையாக புரிந்து கொண்டு பேசிய ஆளுநருக்கு நாங்கள் அறிவுபூர்வமாக பதிலளிக்க உள்ளோம். ஆளுநர், கார்ல் மார்க்சை விமர்சித்து பேசி இருக்கிறார். அறிவியலாளர் சார்லஸ் டார்வினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவருக்கு மார்க்ஸ் மற்றும் டார்வினை பற்றி ஒன்னும் தெரியாது.
அவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகாரர். ஆளுநரின் சட்டையை கழட்டி விட்டு, அவர் ஆர்எஸ்எஸ்காரராக பேசட்டும். இந்திய விடுதலைப் போராட்டத்தில், ஆர்எஸ்எஸ்-க்கு என்ன பங்கு உள்ளது? ஆர்எஸ்எஸ், பிஜேபி தொண்டர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆளுநர், வருத்தம் தெரிவிக்கின்ற வரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “இளையோருக்கு மார்க்ஸ் கதை என்ற புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம். அப்போதாவது கார்ல் மார்க்சை பற்றி ஆளுநர் ரவி தெரிந்து கொள்ளட்டும். அவர் ஆளுநராக இருக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதியாக இருக்கக் கூடாது.
மார்க்சியத்தை எவ்வளவு பேர் விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் உலகத்தில் எவ்வளவு தத்துவங்கள் தோன்றினாலும், மார்க்சியம் தான் அதில் முதன்மை பெறுகிறது என்பதை பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். விடுதலைப் போராட்டத்தில் காட்டி கொடுத்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். நாங்கள் பிரிட்டிஷுக்கு சேவை செய்கிறோம் என்று எழுதிக் கொடுத்தவர்தான் சாவர்க்கர். கார்ல் மார்க்சை பற்றி பேச ஆளுநர் ரவிக்கு அருகதை கிடையாது. தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு ஆளுநர் ரவி போனாலும், எந்த நேரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சார்பில் கருப்புக்கொடி காண்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.