தென் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்காகவே நியூஸ் 7 தமிழ் சார்பில் கல்வி கண்காட்சி நடத்தப்படுகிறது என நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் தெரிவித்தார்.
12-ம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுவதுண்டு. உயர்கல்வி படிப்பதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாமல் மாணவர்கள் ஏதாவது ஒரு கல்வி சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில், நியூஸ்7 தமிழ் சார்பாக கல்விக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக மதுரை காந்தி மியூசியத்தில் உயர் கல்விக்கு வழிகாட்டும் மாபெரும் கல்வி கண்காட்சி பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனையும் படியுங்கள்: மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்கிய நியூஸ் 7 தமிழின் ”கல்வி கண்காட்சி”
இதனை தொடர்ந்து துவக்க நிகழ்ச்சியாக வரவேற்புரை நிகழ்த்திய நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் பேசியதாவது:
”கல்வி என்பது தென் மாநிலங்களில் அதிகமான தாக்கம் செலுத்தியுள்ளது. கிராமப்புறங்களை நோக்கி கல்வி முழுமையாக சென்றடைந்து விட்டதா என்றால் நிச்சயமாக இல்லை. கிராமப்புறங்களில் இன்னும் கல்வி ஒரு சுணக்க நிலையிலேயே உள்ளது.
பெருநகரங்களை நோக்கி மட்டுமே கல்வி நிலையங்கள் உள்ளது. கிராமப்புற மாணவர்களுக்காகவே இந்த கல்வி கண்காட்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து குறிப்பாக தென் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்காகவே இந்த கண்காட்சி அதிக அளவில் நடத்தப்படும்” என நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் பேசினார்.
– யாழன்







