டெல்லி அரசு மருத்துவமனையில் கேரள செவிலியர்கள், தாய் மொழியில் பேசக்கூடாது என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.
டெல்லியில் கோவிந்த் பல்லப் பந்த் (Govind Ballabh Pant) அரசு மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு திடீரென ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், செவிலியர்கள் மலையாளத்தில் பேசுவதால், மருத்துவமனை நோயாளிகள் மொழி புரியாமல் அவதிப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால், இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். இந்த விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் இதற்கு கண்டனங்கள் எழுந்தன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மற்ற இந்திய மொழிகளை போலதான் மலையாளமும். தயவு செய்து மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்’ என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அந்த சுற்றறிக்கையை திரும்ப பெறுவதாகத் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அனில் அகர்வால் கூறும்போது, ’இந்த உத்தரவு தில்லி அரசிடம் இருந்தோ, மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்தோ வரவில்லை. அவரவர்கள் தங்கள் தாய் மொழியில் உரையாடுவது அடிப்படை உரிமை. மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதி இன்றி வெளியிடப்பட்ட அந்த உத்தரவு செயல்படுத்தப்பட மாட்டாது’ என்று தெரிவித்துள்ளார்.