கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒப்படைத்திருந்த நிலையில், மருத்துவர்களின் தவறு உறுதியானதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 7-ஆம் தேதி மூட்டு வழி பிரச்னை காரணமாக, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் காலில் கட்டப்பட்ட கட்டு காரணமாக ரத்த ஓட்டம் இல்லாமல், காலில் இரத்த கட்டு ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, பிரியாவின் வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது. இந்நிலையில், அவர் நவம்பர் 15ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதே பிரியாவின் மரணத்திற்கு காரணம் என பல்வேறு தரப்புகள் தெரிவித்தன. மேலும் பிரியாவுக்கு கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை காவல்துறையிடம் மருத்துவ கல்வி இயக்குனரகம் இன்று ஒப்படைத்துள்ளது. அந்த அறிக்கையில், பிரியாவுக்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தது உறுதியாகியுள்ளதாகவும், அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தவறு செய்துள்ளார்கள் எனவும் சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் மருத்துவக் கல்வி இயக்குனரக அறிக்கையை அடிப்படையாக வைத்து இயற்கைக்கு மாறான மரணம் 174 என்ற சட்ட பிரிவின் கீழ் போடப்பட்டிருந்த வழக்கு, 304 ஏ என்ற அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் எனும் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், மருத்துவ கல்வி இயக்குனராக அறிக்கையை சட்ட நிபுணர்களுக்கு அனுப்பி வைத்து, இந்த வழக்கு கூடுதலாக சில பிரிவுகளின்கீழ் சேர்க்கப்படலாம் என்றும், வழக்குப் பிரிவு மாற்றப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.