சென்னை அரசு மருத்துவமனையில் இளம் கால்பந்து வீராங்கனையான கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா(17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி மூட்டு வழி பிரச்னை காரணமாக, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ரத்தப் போக்கை கட்டுப்படுத்துவதற்காக கட்டப்பட்ட கட்டு, இறுக்கமாக கட்டப்பட்டதாலும், அதிக நேரம் வைத்திருந்ததாலும், ரத்த ஓட்டம் இல்லாமல் காலில் இரத்த கட்டு ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் ஆபத்தான நிலையில், கடந்த 8ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து பிரியா வரப்பட்டார். நவம்பர் 9ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், மாணவி பிரியாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் காவல்துறையினரிடமும் மருத்துவரிடமும், தனது மகளின் இறப்பிற்கு காரணம் என்ன என்று கேட்டு வருகின்றனர். கால்பந்து வீராங்கனையான மாணவி பிரியாவின் கால்கள் அகற்றப்பட்ட சோகம் நீங்காத நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.