28.7 C
Chennai
June 26, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சினிமா

அவ்வையார் ஆன டி.கே. சண்முகம்


ஜ.முஹம்மது அலீ

கட்டுரையாளர்

மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழ் மக்‍களின் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்‍குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என பலரையும் நினைவூட்டும் தொகுப்பு இது.

புராண நாடகங்கள், தேசபக்தி நாடகங்கள் அறநெறி மற்றும் சீர்திருத்தக் கருத்துகள் கொண்ட நாடகங்கள் என நாடகத் துறையின் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவர் ‘அவ்வை’ டி.கே.சண்முகம்..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்; பல திரைப்படங்களில் நடித்தவர்; இயக்‍குநர் ஸ்ரீதரை திரை உலகுக்கு அறிமுகம் செய்தவர் டி.கே.சண்முகம். நாடக உலகிலும், திரை உலகிலும் பிரபல நட்சத்திரங்களின் குருவாகத் திகழ்ந்தவர்; “அண்ணாச்சி” என்று மரியாதையாக அழைக்கப்பட்ட டி.கே.சண்முகம், 1912 ஏப்ரல்
26-ந்தேதி திருவனந்தபுரத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை. தாயார் சீதை அம்மாள். “மனோன்மணியம்” தந்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, டி.கே.சண்முகத்துக்கு உறவுமுறை.

இதனையும் படியுங்கள்: தாயில்லாமல் நானில்லை!!!

தொடக்கத்தில் ஒரு அச்சகத்தில் பணியாற்றிய டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை, பின்னர் நாடக நடிகரானார். இவருக்கு நான்கு புதல்வர்கள். அவர்களில் மூன்றாமவர் டி.கே.சண்முகம். டி.கே.சங்கரன், டி.கே.முத்து சாமி இருவரும் மூத்தவர்கள். டி.கே.பகவதி இளையவர். சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த பாய்ஸ் கம்பெனியில், தனது 4 மகன்களையும் கண்ணுசாமிப்பிள்ளை சேர்த்துவிட்டார்.

திருவனந்தபுரத்தில் பிறந்த டி.கே.சண்முகம், தமது 6-வது வயதிலேயே நாடகத் தந்தை என்று போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் வித்வ பால சபையில் நடிகராகச் சேர்ந்தார். 74 நாடகங்களில் பல்வேறு குணச்சித்திர பாத்திரங்களை ஏற்று, தம் சீரிய நடிப்பால் மக்கள் மனதை ஈர்த்தார். அவற்றுள் முக்கியமானது அவ்வையார் வேடம். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அறநெறிப் பாடல்களை தந்த பழந்தமிழ்ப் பெண்பாற்புலவரான அவ்வையாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கி வயது முதிர்ந்த அவ்வைப் பாட்டி வேடத்தில் நடித்து தமிழ் மக்களின் பாராட்டைப் பெற்றார். அதன் பின்னர் அவ்வை சண்முகம் என்றே அழைக்கப்பட்டார்.

1942-ல் அந்நிய பொருட்களை எதிர்த்து நாடெங்கும் காந்தி கதர் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கிய போது ‘கதரின் வெற்றி’ என்றொரு நாடகத்தைத் தயாரித்தார். கதரின் பெருமை பற்றி விளக்கிய அந்த நாடகம் தான் தமிழ் நாட்டில் முதன்முறையாக நடத்தப்பட்ட தேசிய சமூக நாடகமாகும். அந்த நாடகத்தின் பாத்திரங்கள் யாவரும் கதர் உடுத்தி நடித்தார்கள். முன்னதாக 1931-ம் ஆண்டில் பகத் சிங்கை மனதில் வைத்து தேச பக்தி என்னும் நாடகத்தை அரங்கேற்றினார். இந்நாடகத்தில் பாடப்பட்ட பாடல்கள் மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டி விட்டன இந்த இரு நாடகங்களும் ஆங்கில அரசால் பின்பு தடை செய்யப்பட்டன.

இதனையும் படியுங்கள்: நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

இலங்கை, மலேசியா சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளுக்கும் டெல்லி, பம்பாய், கல்கத்தா , நாகபுரி, பெங்களூர், திருவனந்தபுரம் முதலிய வெளியூர்களிலும் நாடகங்கள் நடத்தி உள்ளார். 1960ம் ஆண்டில் தமிழ்நாடு, சங்கீத நாடகச் சங்கம் சிறந்த தமிழ் நாடக நடிகருக்கான கலாசிகாமணி விருதை வழங்கியது.

1963-ல் டெல்லி சங்கீத நாடக அகாடமி சண்முகத்திற்கு நாட்டின் சிறந்த நாடக நடிகருக்கான விருது வழங்கி சிறப்பித்தது .1968-ல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1971-ல் மத்திய அரசு இவருகக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தாம் ஆற்றிய நாடகச் சொற்பொழிவுகளைத் தொகுத்து நாடகக் கலை என்னும் நூலை எழுதியிருக்கிறார். இவரது நாடகக் குழுவில் பணியாற்றிய அத்தனைப் பேருக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், சரித்திரம் போன்ற பாடங்களுக்கு வகுப்புகள் எடுக்கச் செய்து நாடக நடிகர்களை படித்தவர்களாக மேம்படுத்தினார்.

அவர்களைக் கொண்டே அறிவுச்சுடர் என்னும் கையெழுத்துப் பத்திரிகையும் தொடங்கிக் கட்டுரைகள் எழுதச் செய்ததுடன் அறிவு, அபிவிருத்தி சங்கம் என்னும் ஓர் அமைப்பையும்  தம் நாடக சபையிலேயே தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 50 ஆண்டு கால நாடக வாழ்க்கையை எனது நாடக வாழ்க்கை என்னும் தலைப்பில் ஒரு நாடக வரலாற்று நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.  தம் நாடக வாழ்க்கையை முதன்முறையாக வெளியிட்ட முதல் நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.1973ம் ஆண்டில் காலமானார் அவ்வை சண்முகம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading