‘நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் அராஜக’ தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்..!

நீட் தேர்வை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்து நேற்று சென்னை, திண்டுக்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இந்நிலையில் போராடிய மாணவர்களை கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஒன்றிய பாஜக அரசின் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், தமிழகத்தில் தொடரும் நீட் தேர்வு தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்றைய தினம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை ஒன்றுசேர விடாமல் ஆங்காங்கே கைது செய்தும், காட்டுமிராண்டித்தனமாக தாக்கியும் தமிழக காவல்துறையினர் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.


காவல்துறையினர் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் ஒரு மாணவரின் தோள்பட்டை இறங்கியுள்ளது. அதைவிட அநாகரீகமாக மாணவிகளை ஆண் காவலர்கள் தகாத முறையில் ஆடையைப் பிடித்து இழுத்தும், தள்ளியும், அடித்தும் கைது செய்துள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக காவலர்கள் தங்களது சீருடையில் பெயர் வில்லைகளை அணியாமல் தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்திய சட்டங்கள் படியும் (பி.என்.எஸ். தேசிய மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல் படியும்) இவை குற்றங்களாகும். மேலும், அரசமைப்பு சட்ட உரிமைகள் மற்றும் கண்ணியத்துக்கு எதிரானதாகும்.


எனவே, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவி தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாணவியர்களை தகாத முறையில் நடத்திய ஆண் காவலர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.