ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்.16 வரை நீட்டிப்பு!

ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது…

ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்.சி.பி.) மார்ச் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.  தொடர்ந்து, ஜாபக் சாதிக்கின் கூட்டாளிகளான சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கில் இயக்குநர் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு என்சிபி அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில்,  இன்று (ஏப்.02) இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக்,  சதா,  முகேஷ்,  முஜிபுர் ரகுமான்,  அசோக் குமார் ஆகியோரின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில்,  டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று (ஏப்.02) ஆஜர்படுத்தப்பட்டனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.