நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு செல்லவுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் நேற்று 93 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 513 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா தொற்று பரவல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதில் அலட்சியம் ஏற்பட்டுள்ளதால், நோய் பரவல் அதிகரித்திப்பதாக அவர் கவலை தெரிவித்தார். எனவே, 5 அம்ச பாதுகாப்பு உத்திகளை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார்.

அதன்படி, கொரோனா பரிசோதனை, சிகிச்சை, கொரோனா தொற்று பரவலுக்கு ஏற்ப நடத்தை விதிமுறைகள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகிய ஐந்து அம்சங்களைப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
இதனிடையே, கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ளும்படி மக்களிடம் 100 சதவீதம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்த விழிப்புணர்வு இயக்கம் வரும் 14 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







