இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் திணறுவதாகவும், 300 தொகுதிகளில், 40 இடங்களில் காங்கிரஸ் வெல்லுமா என்பது சந்தேகமே என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்றிருந்த நிலையில், மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், மம்தா பானர்ஜி நேரடியாகக் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது,
“காங்கிரஸ் கட்சி 300ல் 40 இடங்களில் வெல்லுமா என்றே எனக்குத் தெரியவில்லை. நீங்கள் மேற்கு வங்கத்திற்கு வந்துள்ளீர்கள். நானும் இந்தியா கூட்டணியில் தானே இருக்கிறேன். குறைந்தபட்சம் என்னிடம் உங்கள் பயணம் குறித்துச் சொல்லி இருக்கலாமே. எனக்கு அரசு இயந்திரம் மூலமாகவே தெரிய வந்தது.
உங்களால் முடிந்தால் வாரணாசியில் பாஜகவைத் தோற்கடிக்கவும். முன்பு வென்ற இடங்களிலும் இந்த தேர்தலில் நீங்கள் தோற்றுப் போவீர்கள். எங்கள் கட்சி உத்தரப் பிரதேசத்தில் இல்லை, நீங்கள் தானே அங்கே இருப்பதாகச் சொல்கிறீர்கள். முடிந்தால் தோற்கடித்துக் காட்டுங்கள். நீங்கள் இந்த முறை ராஜஸ்தானில் கூட ஜெயிக்கவில்லை. போய் அந்த இடங்களை முதலில் வெல்லுங்கள். அலகாபாத்தில் போய் வெற்றி பெறுங்கள். நீங்கள் எவ்வளவு தைரியமான கட்சி என்று அப்போது பார்க்கலாம்.
இப்போது இங்கே ஒரு புதிய ஸ்டைல் உருவாகியுள்ளது. அதாவது போட்டோ ஷூட் ஸ்டைல்.. இதுவரை டீக்கடைக்கு கூடப் போகாதவர்கள் இப்போது பீடித் தொழிலாளிகளுடன் அமர்ந்து பீடி சுற்றுகிறார்கள். இதெல்லாம் மக்களுக்குத் தெரியாமல் ஒன்றும் இல்லை” என்று அவர் மிகக் கடுமையாகச் சாடினார்.







