வியாசர்பாடி காவல் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த நிலையில், அதிருஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி காவல் நிலைய கட்டடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த காவல் நிலையத்தின் சுவர்களில் விரிசல் விட்டு குண்டும் குழியுமாக இயங்கி வருகிறது. அந்த விரிசலிட்ட சுவர்களின் மூலம் பூச்சிகள் காவல் அதிகாரிகள் மீது விழும் அவலம் நேரிடுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் காவல் ஆய்வாளர் அறைக்கு அருகாமையிலிருந்த சிறிய அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது அந்த அறைக்குள் எந்த காவலர்கள் இல்லாத காரணத்தினால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இதனைக்கண்ட வெளியே காவலுக்கு இருந்த போலீசார் உள்ளே சென்று பார்த்து உடனடியாக இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு கட்டிட தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கட்டிட தொழிலாளர்கள் பெயர்ந்து விழுந்த சிமெண்ட் உதிரி பாகங்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை பூசும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.







