தமிழ்நாட்டில் 6 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்த ரெட்டி உத்திரவிட்டுள்ளார்.
நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகள் உள்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்த ரெட்டி வெளியிட்ட அறிவிப்பில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ.ஜி.பாபு, சென்னை தொழில்நுட்ப சேவைகள் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஆனி விஜயா,பயிற்சி டிஐஜியாக சென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேபோல காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.செல்வகுமார், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புத் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் மாநகர தலைமையக துணை கமிஷனராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.பியாக விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக இருந்தார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் நகர துணை ஆணையராக பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.







