கோவை அருகே பெரியார் பெயரில் புதிதாக உணவகம் திறக்க இருந்த நிலையில், உணவக ஊழியர்கள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை கண்ணார்பாளையம் நால்ரோடு
பகுதியில் பிரபாகரன் என்பவர் புதியதாக பெரியார் உணவகம் என்ற பெயரில் உணவகம்
ஒன்று நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற இருந்தது.
இதற்காக உணவகத்தின் பணியாளர்களான நாகராணி (38). அவரது மகன் அருண் (20) ஆகிய இருவரும் கடை திறப்பு ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் கடைக்குள் நுழைந்த இந்து அமைப்பினர் சிலர், காரமடை சுற்றுவட்டார பகுதி இந்து அமைப்புகளுக்கான கோட்டையாக உள்ளது என்றும் ஆகவே இப்பகுதியில் தந்தை பெரியார் என்ற பெயரில் உணவகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாகராணி, அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சேர்ந்து நாகராணி, அருணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் காரமடை கண்ணார் பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் நாகராணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 38 தையல்கள் போடப்பட்டுள்ளது. அருணும் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காரமடை
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தாக்குதல் நடத்திய 7 பேரில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் சிக்கரம்பாளையம் காளட்டியூர் பகுதியை சேர்ந்த ரவிபாரதி (39), காரமடை காந்தி
மைதானம் பகுதியை சேர்ந்த பிரபு (27), தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுனில்
என்கிற சதீஷ்குமார் (32), பெரிய வடவள்ளி பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (30),
மங்களகரை புதூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (26) என்பது தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-இரா.நம்பிராஜன்








