அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவர வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திடம் சிபிசிஐடி விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம்
11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தினுள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து வருவாய்த் துறையினர் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 21-ஆம் தேதி சீல்’ அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் சி.வி.சணமுகம் ராயப்பேட்டை
காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களுடன் வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் ராயப்பேட்டை போலீசார் ஆகஸ்டு 13-ந்தேதி ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பதியப்பட்ட 4 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டன. விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணையை அதிகாரப்பூர்வமாக சி.பி.சி.ஐ.டி. தொடங்கி உள்ளது. இந்த வழக்கில் முதல்கட்டமாக அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு மகாலிங்கம் ஆஜராகியிருக்கிறார். அவரிடம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் விசாரணை நடத்தி வருகிறார். இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் அடுத்த கட்டமாக அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகம் சி.பி.சி.ஐ.டி வட்டாராங்கள் தெரிவித்துள்ளன.







