கோவையில் அழகு நிலைய ஊழியரை 12 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை வெள்ளகிணறு பிரிவு வி.கே.எல் நகரில் சாலையோர குப்பைத் தொட்டியில் செப்டம்பர் 15ஆம் தேதி துண்டாக வெட்டப்பட்ட கை கிடந்துள்ளது. இதுகுறித்து, துடியலூர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், துண்டாக கிடந்த கை, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த பிரபு (40) என்பவருடையது என்பதும், அவர் கோவையில் தங்கி காந்திபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவரது மற்ற உடல் பாகங்கள் துடியலூர் சந்தை கிணற்றில் நேற்று கண்டறியப்பட்டன. இக்கொலை வழக்குத் தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் விசாரித்து மூவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘உயிரிழந்த பிரபுவுக்கு சரவணம்பட்டியைச் சேர்ந்த அழகு நிலையம் நடத்தி வரும் கவிதா என்பவருடன் அறிமுகம் இருந்துள்ளது. அவரது புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு பிரபு மிரட்டியுள்ளார். இதனால், ஐடி பார்க் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வரும் அமுல் திவாகர் (34), கார்த்திக் (28) ஆகியோர் உதவியுடன் பிரபுவை வீட்டிற்கு வரவழைத்து கவிதா கொலை செய்ததும், 12 பாகங்களாக உடலை வெட்டி வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை காவல் துறையினர் பிரபுவின் வெட்டப்பட்ட 8 துண்டு உடல் பாகங்களையும் கைப்பற்றினர். மேலும், அமுல் திவாகர், கார்த்திக், கவிதா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்றார். பேட்டியின்போது, டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
-ம.பவித்ரா








