சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரியில் உயிரிழந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சந்திரா என்ற 72வயது விதவை மூதாட்டி தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். அடிக்கடி கோயிலுக்குச் சென்று வரும் வழக்கம் கொண்ட சந்திரா, வீட்டில் சிங்கப்பெருமாள் கோவில் போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனிடையே கூடுவாஞ்சேரி அருகே மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, சந்திரா தான் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கருதியுள்ளனர். உயிரிழந்த மூதாட்டியின் உடல் தனது அம்மாவின் உருவத்தோடு ஒத்துப்போனதால் அது சந்திரா தான் என்று வடிவேலுவும் உறுதி செய்துள்ளார். இதையடுத்து சந்திராவின் புகைப்படம் இடம்பெற்ற கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உடலைப் பெற்று வந்து தாரை தப்படையுடன் நல்லடக்கம் செய்தனர்.
இந்நிலையில் மறுநாள் படையல் போட்டபோது உயிரிழந்ததாக கருதி நல்லடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி சந்திரா வீட்டுக்கு திரும்பி வந்ததைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன்பிறகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது சந்திரா இல்லை என்பதும், வேறொரு மூதாட்டியின் உடலைப் பெற்று வந்து நல்லடக்கம் செய்ததும் சந்திராவின் உறவினர்களுக்கு புரிந்தது. தாம்பரம் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்த மூதாட்டியின் உடல் யாருடையது என்று குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பரசுராமன்.ப







