மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பாப்புலர் ப்ரண்ட ஆப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி பல்வேறு பயிற்சிகளை அளித்து வருவதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி மதுரையில் நெல்பேட்டை பகுதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் என ஏழு பேர் வீட்டிலும் குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் யூசுப் என்பர் மற்றும் மாநில பேச்சாளர் அகமது எத்திரிஸ்,மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் முகமது சிகாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நெல் பேட்டை, கோரிபாளையம், கோமதிபுரம் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.
மேலும் சோதனை முடிந்து செல்ல முயன்ற அதிகாரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கோரிப்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகளை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இந்த சோதனையின் போது மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை முகமது இஸ்திரிஸ், முகமது அபுதாஹிர், செய்யது இஷாக், காஜா மைதீன், காலித் முஹமது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் செய்தி தொடர்பாளர் முகமது சிகாம் தலைமறைவாகியுள்ளதாகவும் அதேபோன்று இந்த சோதனையில் செல்போன், பெண்டிரைவர், சிம் கார்டு, செல்போன், புத்தகம், டைரி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உளவு பிரிவு காவலர் துரை என்பவர் மீது தாக்குதல் நடத்தியதால் காவலர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.







