கோவையில், சட்டவிரோதமாக 1,244 டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், காரமடையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அப்பகுதியில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த நான்கு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து போலீசார் நடத்திய மேல் விசாரணையில், அவர்கள் திருச்சூரை சேர்ந்த தினேஷ், ஆனந்த், காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார், திருவாரூரைச் சேர்ந்த செந்தில் குமார் என்பது தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக
இதில் சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகிய இருவரும் பழைய கட்டிடங்களை தகர்த்துக் கொடுக்கும் தொழில் செய்து வருவதாக தெரிவித்தனர். மேலும் ரங்கராஜ் என்பவர் கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடி பொருளை எவ்வித உரிமமும் இன்றி பயன்படுத்தி வருவதாகவும், அவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு சட்டத்திற்கு புறம்பாக கேரளாவிற்கு விற்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ரங்கராஜ், கோபால், பெருமாள், சந்திரசேகரன் என மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றம் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை கைப்பற்றினர். பின்னர் கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
– அனகா காளமேகன்