கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிக்காக ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்றார். அப்போது, ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புக்களிலும் கொரோனா முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்புப் பைகளை வழங்கிய முதல்வர், உள்ளாட்சி அமைப்பினைச் சேர்ந்த அலுவலர்கள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்புப் பைகளை வழங்க உத்தரவிட்டார்.
நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தினசரி பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கு மாவட்டங்களில் ஆய்வினை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.