திமுக, அதிமுக ஆகியவை குற்றம் சாட்டுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக தலைநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. நேற்றும் இன்றும் மழை ஓய்ந்து வெயில் அடிக்கும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சென்னையை அடுத்த போரூர் செட்டியார் அகரத்தில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல தி.நகரிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, திமுக, அதிமுக ஆகியவை குற்றம் சாட்டுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் எல்.முருகன், தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
1996 முதல் சென்னையில் மழை பெய்தால் இதுபோன்ற நிலை தான் காணப்படுகிறது எனவும், மேயராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபோது ஸ்டாலின் உரிய திட்டங்களை தீட்டியிருந்தால் இன்று இதுபோன்ற சூழல் ஏற்பட்டிருக்காது எனவும் கூறினார். தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு உடனுக்குடன் வழங்கும் என்ற எல்.முருகன், மீனவர் நலனைக் காக்க விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.