சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்த பத்மபிரியாவின் உடல், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, பத்மபிரியா என்ற ஐடி ஊழியர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய பத்மபிரியாவை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கட்டிட இடிப்பு பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜேசிபி உரிமையாளர் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இடத்தின் உரிமையாளர் பாத்திமா, இன்ஜினியர் ஷேக் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பத்மபிரியாவின் உடலை பெற அவரது உறவினர்கள் இன்று வருகை தந்தனர்.
அப்போது பேசிய பத்மபிரியாவின் தந்தை பாண்டி முருகேசன், “எனது மகள் எம்டெக் படிப்பை முடித்துவிட்டு, கடந்த மாதம் சென்னையில் வேலை கிடைத்து பணியாற்றுவதற்காக ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு வந்து எனது மகள், கடந்த 17ஆம் தேதி சென்னைக்கு வந்து மீண்டும் பணியில் சேர்ந்தார். அப்பொழுது தான் அவளை நான் கடைசியாக பார்த்தேன்.
நேற்று காலை இந்த சம்பவம் நடந்ததை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனது மகளின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. மாநகராட்சி அலட்சியத்தால் எனது மகளின் உயிர் பறிபோனது. பல கனவுகளுடன் வளர்த்த எனது மகள் தற்போது எங்களை விட்டு பிரிந்து சென்றது எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பத்மபிரியாவின் சகோதரர் கெளதம், “எனது சகோதரியின் மரணம் தொடர்பாக இரண்டு பேரை மட்டும் கைது செய்துள்ளனர். இன்னும் இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனது தங்கையின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் எங்களது சகோதரியின் சடலத்தை வாங்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து பத்மபிரியாவின் உறவினர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் பத்மபிரியாவின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து உயிரிழந்த பத்மபிரியாவின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை உசிலம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.








