அதிமுகவினர் தடையை மீறி வள்ளூவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என அவர்கள் அமளியில் ஈடுபட்டு முழக்கமிட்டதால், சபாநாயகர் அப்பாவு அவர்களை வெளியேற்றினார். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் இருந்து வெளியேறி சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க சபாநாயகர் மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்திருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தளவாய் சுந்தரம், ஆதிராஜராம் உள்ளிட்டோர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஆனால் அதிமுக போராட்டத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், தடையை மீறி அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்ட அதிமுகவினர் கருப்பு சட்டையுடன் வந்தனர்.
பின்னர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுக ஆட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தை கைவிடும்படி காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடாததால், எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதையடுத்து, தயார் நிலையில் இருந்து பேருந்தில் அவர்களை அழைத்து சென்றனர்.








