சிபிஐ காவலில் தன்னை வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என்று டெல்லி மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ அதிகாரிகளால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 26) கைது செய்யப்பட்டார். டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 நாட்கள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. அதன்படி அவருடைய காவல் இன்று முடிவடைவதால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தரப்பு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்ததுடன், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. அதன்படி ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
‘கைதுக்கு முன்னதாகவே சிபிஐ விசாரணைக்கு அழைத்த போது முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டன. எனவே, தன்னை காவலில் வைத்திருப்பதன் மூலமாக எந்த பயனும் இல்லை’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.