குன்னூர் மரப்பாலம் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து உரிமையாளர், ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் பேருந்து குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் உட்பட அதில் பயணித்த 61 பேரில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 43 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் விபத்தில் காயங்கள் ஏதும் ஏற்படாமல் இருந்த ஒன்பது பேருக்கு காயங்கள் எதுவும் ஏற்படாதது உறுதி செய்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவரையும் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்விபத்து தொடர்பாக குன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில், ஓட்டுநரின் அஜாக்கிரதை காரணத்தினால் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இது தொடர்பாக விபத்துக்குள்ளான பிரியா டிராவல்ஸ் சுற்றுலா பேருந்தின் உரிமையாளர் சுப்பிரமணி, ஓட்டுநர் முத்துக்குட்டி, கோபால் மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகிய நான்கு பேர் மீது குன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து காணப்படும் நிலையில், ”வாகன விபத்துகளை தவிர்க்க மலைப்பிரதேசத்தில் பயணிக்க கூடிய சுற்றுலா பயணிகள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், மலைப்பிரதேசங்களில் 35 கிமீ வேகத்திற்குள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
சுற்றுலா வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான சுற்றுலா பயணிகளை வாகனங்களில் ஏற்றி வரக்கூடாது, மலைப்பாதையில் வாகனங்களை கீழ்நோக்கி இயக்கும் போது பிரேக் உள்ளிட்டவைகள் சரியாக இயங்குகிறதா என அறிந்து வாகனங்களை இயக்க வேண்டும்.
மலைப்பிரதேசங்களில் வாகனங்களை இயக்குபவர்கள் அனுபவம் பெற்றோர்களாக இருக்க வேண்டும், வாகனங்களை இயக்குவதற்கு முன்பு வாகனங்களின் தன்மையை குறித்து கண்டிப்பாக சோதனை செய்யப்பட்டு இருக்க வேண்டும், எக்காரணத்தை கொண்டும் வாகனத்தை அதிவேகமாக இயக்கக் கூடாது மீறினாள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.