ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசா என்னுமிடத்திற்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனை ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தவுசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி ஷிவ்ராம் மீனா கூறியதாவது: தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை சமர்ப்பித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆம்புலன்ஸில் காலணிகளை எடுத்துச் சென்றது ஒரு தீவிரமான பிரச்னை.
இன்று காலையில் தான் இது எங்களது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அவர் கூறினார்.







