மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில், டோல்கேட் ஊழியர் பலியான நிலையில், மேலும் 3போ் படுகாயம் அடைந்த சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்திலிருந்து இருந்து கேரள மாநிலம் நோக்கி அரிசி மூட்டைகளை
ஏற்றிச் சென்ற லாரி திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த பொழுது மதுரை
கருப்பாயூரணி பி.சி பெருங்காய சந்திப்பு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது
திடீரென பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து சென்ற நிலையில், லாரியை நிறுத்த முயன்ற பொழுது லாரி வண்டியூர் டோல்கேட் உள்ளே புகுந்தது.
அங்கு பணியில் இருந்த திண்டுக்கல் மாவட்டம் களிங்கப்பட்டி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற ஊழியர் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த சதீஷின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், விபத்தில் சதீஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, லாரி அடுத்தடுத்து எதிரே வந்த கார் மற்றும் பைக்குகள் மீது
மோதியதில் 3 பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அரிசி ஏற்றி வந்த கனரக லாரி திடீரென டோல்கேட்டில் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
—ரூபி.காமராஜ்







