பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் இந்த போதை மாடல் அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக் கத்தியும் புழங்கும் நிலையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று விளம்பர விழா எடுக்க திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
“அப்பா” என்ற அடைமொழிக்கு ஆசைப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தனது கண்முன்னே பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம்.
“அரசுப்பள்ளி எனது கோட்டை” என்று முழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், அரசுப்பள்ளிகளில் இத்தனை அக்கிரமங்கள் நடக்கையில் எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
பதின்ம வயது பள்ளி மாணவனுக்கு கூட கஞ்சா விற்கப்படுகிறது என்றால் திமுகவின் ஏவல்துறை எந்தளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்? தங்களின் அவல ஆட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீதும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடுபவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதில் மட்டுமே திமுக அரசு அதீத கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், நமது சமூகக் கட்டமைப்பை அரித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்”
என்று தெரிவித்துள்ளார்.







