நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டு வரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் பேரிடர் பாதிப்புக்குள்ளான வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் 570க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால், பாதிப்புக்குள்ளான 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று மக்களை சந்தித்த நிலையில், ஜோஷிமத் நகரம் பேரிடரால் பாதிக்கப்பட்ட வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அம்மாநில அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜோஷிமத் விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் சார்பில் உயர்மட்டக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. உத்தரகாண்ட் முதலமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.







