“பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2024 – 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய…

2024 – 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில், பட்ஜெட் குறித்து எதிர்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக இன்று பிரதமர் மோடிக்கு அறிவுறுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (X) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சரின் ட்விட்டர் (X) பதிவில் கூறியிருப்பதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே… “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.