இலங்கையைச் சேர்ந்தவர் கொடூரமாகk கொல்லப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் மதத்தை இழிவுப்படுத்தியதாகக் கூறி, அந்த தொழிற் சாலையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், அவரை சரமாரியாகத் தாக்கி அவரை சாலைக்கு இழுத்து வந்து அடித்து, உதைத்தனர். கடும் சித்ரவதையின் காரணமாக சம்பவ இடத்திலேயெ அவர் உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் அவர் உடலுக்கு தீவைத்து எரித்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் தெஹ்ரீக்- ஏ -லைப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘இது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். இதில் தொடர்புடைய அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் 26 முக்கிய குற்றவாளிகள் உட்பட 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. நீர்கொழும்பு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட இருக்கிறது.
இதனிடையே கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அரசாங்கம் மன்னிப்புக் கோர வலியுறுத்தி சிங்கள தேசிய ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும்,பாகிஸ்தான் அரசு, பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது










