பாக்.கில் இலங்கை இளைஞர் எரித்துக்கொலை: ‘அவமானகரமான நாள்’- இம்ரான் கான்

பாகிஸ்தானில் இலங்கையை சேர்ந்தவர் சித்தரவதை செய்து எரித்துக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள…

பாகிஸ்தானில் இலங்கையை சேர்ந்தவர் சித்தரவதை செய்து எரித்துக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் மதத்தை இழிவுப்படுத்தியதாகக் கூறி, அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து, அவரை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவரை சாலைக்கு இழுத்து வந்து அடித்து, உதைத்தனர். கடும் சித்ரவதையின் காரணமாக சம்பவ இடத்திலேயெ அவர் உயிரிழந்தார்.

பின்னர், அந்த கும்பல் பிரியந்தா குமாராவை சாலையில் தீவைத்து எரித்தனர்.இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார், கூட்டத்தை அடித்து கலைத்தனர்.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் தெஹ்ரீக்- ஏ -லைப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் ஹாசன் கவார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். இதில் தொடர்புடைய அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.