தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு, இரு பெண்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 54 வயது நபர் ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரும், பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மயிலாடுதுறை சீர்காழி கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வந்த மீனா, கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இடது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த மே 14-ஆம் தேதி அவரது இடது கண் அகற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கு கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மின்னூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குழுவினர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
இதனிடையே கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருப்பதாக மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய்க்கு மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வரும் மதுக்கரை மீனாட்சிபுரத்தை சேர்ந்த கந்தசாமிக்கு, கருப்பு பூஞ்சைக்குரிய மருந்துகளை வழங்கி சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது மகள் சுபாஷினி கோரிக்கை விடுத்துள்ளார்.