“வேலையின்மை என்ற நோயால் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிக்கின்றன” – ராகுல் காந்தி காட்டம்!

நாட்டிலேயே, பாஜக ஆளும் மாநிலங்கள் வேலையின்மை என்ற நோயின் மையமாக மாறியுள்ளதாக மக்களவை எதிர்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.  நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக தரவுகள் அவ்வவ்போது வெளியாகி வருகின்றன. இதனால்,…

நாட்டிலேயே, பாஜக ஆளும் மாநிலங்கள் வேலையின்மை என்ற நோயின் மையமாக மாறியுள்ளதாக மக்களவை எதிர்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக தரவுகள் அவ்வவ்போது வெளியாகி வருகின்றன. இதனால், இளைஞர்கள் பலர் நிரந்தர வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஒரு பணியிடத்திற்கு 100 பேர் போட்டிபோடும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை சிக்கல் உச்சம் தொட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்ச்சாட்டி வருகின்றன. ஆளும் அரசு அதற்கு மறுப்பும் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் குஜராத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் 10 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு ஏராளமானோர் குவிந்ததால், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் உள்ள தெர்மாக்ஸ் நிறுவனத்தில் 10 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையறிந்த இளைஞர்கள் பலர், அந்த நிறுவன வாசலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வீடியோவில் காணலாம்.

இந்தப் பணியிடங்களுக்காக, கட்டுக்கடங்காத இளைஞர்கள் கடந்த ஜூலை 9-ம் தேதி குவிந்துள்ளனர். சுமார் 1800 பேர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. இப்படி இளைஞர்கள் முண்டியடித்து வேலைக்காகக் குவிந்ததால், அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி உடைந்தது. என்றாலும், இந்தச் சம்பத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ”வெறும் 10 பணிகளாக இருந்தாலும், அந்த வேலையைப் பெறுவதற்காக இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்” என ஒரு பயனர் தெரிவித்துள்ளார். ஆனால் மற்றவர்களோ, நிறுவனம் செய்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ”இவ்வளவு பெரிய கூட்டத்தை கையாள அந்த நிறுவனம் தயாராக இருந்திருக்க வேண்டும்” என அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங். முக்கிய தலைவருமான ராகுல் காந்தி பகிர்ந்து, நாட்டின் வேலைவாய்ப்பின் நிலை இதுதான் என்பதுபோல் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியாவில் ‘வேலையின்மை என்ற நோய்’ ஒரு தொற்றுநோயாக உருவெடுத்துள்ளதோடு, பாஜக ஆளும் மாநிலங்கள்தான் இந்த நோயின் மையமாக மாறியுள்ளன. ஒரு வேலைக்காக வரிசையில் நிற்கும் ‘இந்தியாவின் எதிர்காலம்’ நரேந்திர மோடியின் ‘அமிர்தகால’த்தின் யதார்த்தமாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.