மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியுடன் இணைந்து பாமக தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் (மார்ச் 16) அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக உடன் பாமக இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, இன்று இரவு இரு கட்சி தலைவர்கள் சந்தித்து ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும், 12 முதல் 14 தொகுதிகள் வரை பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.







