பாஜகவினர் முதல் முறையாக நடைபயணம் முயற்சி எடுத்துள்ளனர். ராகுல் காந்தியின் வழியில் பாஜகவினர் தொடங்கி இருக்கின்றனர் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன்னுடைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மாணிக்கம் தாகூர், மத்திய பாஜக அரசின் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பது மத்திய அரசின் கடைசி பட்ஜெட் ஆக இருக்கும். இந்த பட்ஜெட்டிலாவது விருதுநகருக்கு ஏமாற்றம் செய்யாமல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகர் மாவட்டத்திற்கு உரிய திட்டத்திற்க்கான நிதியை கொடுக்க வேண்டும் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விருதுநகர் மாவட்டத்தின் GST வரி வருவாய் மூலம் அதிகமாக உள்ள போதும் மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கும் நிதி என்பது குறைவாக உள்ளது. இதனை இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் சீர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு 9 வாரங்களாக ஊதியம் வரவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை அறிவித்து இருப்பது நல்ல முடிவு. இந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். மேலும் இந்த வெற்றி என்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அரசின் செயல்பாட்டுக்கு கிடைக்கும் வாக்காக பார்க்கிறோம் என்றார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரையில் வெறும் வாயில் வடை சுடுகிறவர். அண்ணாமலைக்கு உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியாகவோ – தனித்தோ போட்டியிடட்டும் ஆனால் அவருக்கு தைரியம் இல்லை என்றார். மேலும் தமிழகத்துக்கு சிறு பிள்ளை தனமான அரசியலை கொண்டு வந்தவர் அண்ணாமலை என்றார்.
டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பாஜகவின் அம்சங்களை புகுத்துவது போல் உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் என்பது பாஜக அலுவலகமாக இருக்க கூடாது. அந்த கட்டிடம் இந்தியாவின் நாடாளுமன்றமாக இருக்க வேண்டும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருகிறது. அதே போல்
பாஜவின் மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கமானது மக்களை பிரித்தாழுவதற்கான தொடர் முயற்சி தொடர்கிறது. சேது சமுத்திர திட்டத்திலும் அது தொடர்கிறது. குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து பி.பி.சியின் ஆவணப்படம் என்பது உலகத்திற்கு முக்கியமான வெளிச்சத்தை எடுத்து காட்டி இருக்கிறது என்று கூறினார்.
ராகுல் காந்தியின் நடைபயணம் அடுத்த வாரத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில் அன்பை அடிப்படையாகவும் சகோதரத்துவத்தை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட யாத்திரை நிறைவடையுள்ளது.
ராகுல் காந்தி நடைபயணத்தை துவங்கிய பொழுது எதிர்மறையாக பேசியவர்கள், கேலி செய்தவர்கள் தற்பொழுது நடைபயணம் செய்யத் தொடங்கி இருப்பது அதிலும் பாஜகவினர் நடை பயணம் செய்யத் தொடங்கி இருப்பது பாராட்டுக்குரியது. இந்த நடை பயணத்தில் பாஜகவினர் மக்களிடம் பரிதாபங்களை கொண்டு செல்லாமல் அன்புடன் செல்ல வேண்டும். பாஜகவினர் முதல் முறையாக இந்த முயற்சி எடுத்துள்ளனர். ராகுல் காந்தியின் வழியில் பாஜகவினர் தொடங்கி இருப்பது தெரிய வருகிறது என்று கூறினார்.