நான் உங்களிடம் பேச விரும்புகிறேன்: அசாம் முதல்வருக்கு மெசேஜ் அனுப்பிய ஷாருக்கான்

‘பதான்’ எதிர்ப்பு போராட்டம் குறித்து கவலை தெரிவிக்க ஷாருக்கான் அதிகாலை 2 மணிக்கு தன்னை அழைத்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

‘பதான்’ எதிர்ப்பு போராட்டம் குறித்து கவலை தெரிவிக்க ஷாருக்கான் அதிகாலை 2 மணிக்கு தன்னை அழைத்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியிருப்பதுதான் ‘பதான்’ திரைப்படம். இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் மற்றொரு முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து படத்தில் இடம்பெறுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளானது.

அந்த பாடல் வீடியோ காட்சியில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்து டூயட் பாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன . இதனால் ‘பேஷாரம் ரங்’ பாடலில் தீபிகா படுகோனை காவி நிற பிகினியில் காட்டியதன் மூலம் காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாகக் பாலிவுட் மெகாஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது ‘பதான்’ படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூறி இந்து அமைப்பை சேர்ந்த பலரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.மேலும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல தலைவர்கள் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று படம் திரையிடப்படவிருந்த நரேங்கியில் உள்ள தியேட்டரை முற்றுகையிட்டு பஜ்ரங் தள ஆர்வலர்கள் வன்முறைப் போராட்டத்தில் குதித்தனர். அப்போது தீவிர வலதுசாரி குழுவின் தொண்டர்கள் படத்தின் போஸ்டர்களை கிழித்து எரித்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம், கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஹிமந்தா , பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பற்றியோ, அவரது படமான பதான் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது” என கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அழைத்து ‘நான் ஷாருக்கான். நான் உங்களிடம் பேச விரும்புகிறேன்’ என்று கூறி தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும், நகரில் தனது புதிய படமான ‘பதான்’ படத்திற்கு எதிரான போராட்டம் குறித்து கவலை தெரிவித்ததாகவும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். திரைப்படத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து தனது அரசாங்கம் விசாரிக்கும் என்றும், “இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள்” மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் சர்மா நடிகரிடம் உறுதியளித்ததாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பாலிவுட் நடிகர் திரு @iamsrk எனக்கு போன் செய்து இன்று காலை 2 மணிக்கு பேசினார். குவாஹாட்டியில் தனது படத்தின் திரையிடலின் போது நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்று நான் அவருக்கு உறுதியளித்தேன். நாங்கள் விசாரித்து, இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

“ஷாருக் கான் யார்? அவரைப் பற்றியோ அவரது ‘பதான்’ படத்தைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது என்று முதல்வர் கூறிய ஒரு நாள் கழித்து இந்த நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் ஆனந்த் இயக்கியிருக்கும் பதான் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. இப்படம் ஆதித்யா சோப்ராவின் லட்சிய உளவு பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.