மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஒன்பது கேள்விகள் அடங்கிய ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வரும் நிலையில் பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரராகவும், ஏழைகள் தொடர்ந்து ஏழையாகவும் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பொதுசொத்துக்கள் விற்பனை செய்யப்படுவது ஏன்? என்று வினா எழுப்பியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்போது விவசாயிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக்கப்படவில்லை என வினவியுள்ள காங்கிரஸ், கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் ஏன் இரட்டிப்பாகவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து எல்ஐசி மற்றும் எஸ்பிஐயில் சேமித்து வைத்த தொகையை, அதானிக்கு பயனளிக்கும் வகையில் பணயம் வைப்பது ஏன் என்று பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழலைப் பற்றி பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் என வினவியுள்ளது.
சீனாவுடன் 18 முறை சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய நிலத்தை தொடர்ந்து சீனா ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது ஏன்? என்றும் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களை கொடுக்க மறுத்து வருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது
தேர்தல் ஆதாயங்களுக்காக ஏன் வேண்டுமென்றே வெறுப்பு அரசியலை பயன்படுத்துகிறீர்கள் என்று பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி, மக்களிடையே ஒருவித அச்சமான பதட்டமான சூழலை உருவாக்குவது ஏன் என்றும் வினா எழுப்பியுள்ளது.
சமூக நீதியின் அடித்தளத்தை பாஜக அரசு ஏன் அழிக்கிறது என்று வினவியுள்ள காங்கிரஸ், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தார் மீதான கொடுமைகளுக்கு எதிராக அமைதி காப்பதும், சாதி வாரி கணக்கெடுப்பு பற்றிய கோரிக்கையை தொடர்ந்து புறக்கணிப்பதும் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் ஜனநாயக அமைப்புகளையும் பலவீனப்படுத்தி, எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் அரசியலை செய்வது ஏன் என்று வினா எழுப்பியுள்ள காங்கிரஸ், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பண பலம் கொண்டு சீர்குலைப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
வரவு செலவுத் திட்டங்களைக் குறைத்து, கட்டுப்பாடு விதிகளை உருவாக்கி, ஏழைகள் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான திட்டங்களை பலவீனப்படுத்துவது ஏன் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா காரணமாக உயிரிழந்த 40 லட்சத்துக்கும் அதிகமானோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மறுத்தது ஏன் என்று பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்பும் கட்டாய நிலைக்கு வித்திட்டது ஏன் என்றும் வினா எழுப்பியுள்ளது.