ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின், இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 233 ரன்கள் குவித்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி முதலாவது குவாலிஃபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அடுத்ததாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இறுதிப்போட்டியின் சென்னை அணியுடன் மோதும் அணியை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாவது குவாலிஃபயர் போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. அதில், குவாலிஃபயர் 1-ல் தோல்வியுற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்துள்ளது. வெறியாட்டம் ஆடிய சுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்கள் விளாசினார். அவருடன் கைகோர்த்த சாய் சுதர்சன் 31 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைய 234 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.