சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்ற புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு வனத்துறை தரப்பில், புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், முக்கிய குற்றவாளியை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளதாகவும், சத்தியமங்கலம் வழக்கில் அவரை கைது செய்ய சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு கோரிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டவரை சத்தியமங்கலம் புலிகள் வேட்டை வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
யானைகள் வேட்டை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் மற்றும் சிபிஐ எஸ்.பி. ஆகியோர் காணொலி காட்சி மூலம் நவம்பர் 8ம் தேதி ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படியுங்கள் : ‘லியோ’ சிறப்பு காட்சிகள் – அரசு வெளியிட்ட புதிய ஆணையில் சொல்வது என்ன?
தமிழக – கேரள வனப்பகுதியில் ரயில்களில் அடிபட்டு, யானைகள் பலியாவதை தடுக்க அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகளை போல, கூடுதலாக அமைக்கலாமா என்பது குறித்து இரு மாநில வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.








