புளியந்தோப்பில் மின்சார கேபிளை வெட்டி திருட முயன்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு டிமெல்லோஸ் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு தினமும் அங்கு வேலைகள் நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை 2 மணி அளவில் புளியந்தோப்பு பகுதியில் பலத்த சத்தம் கேட்டது.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து
இருவர் சுயநினைவு இல்லாமல் இருந்தனர். இது குறித்து உடனடியாக அம்மக்கள் பேசன் பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பேசன் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு மருத்துவர்கள் வந்து பார்த்த பொழுது ஒருவர் உயிரிழந்தது தெரிய
வந்தது. மற்றொருவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றனர். இது குறித்து பேசன் பிரிட்ஜ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அண்மைச் செய்தி : சட்டப்பேரவை ஏப். 21-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு!
இந்த விசாரணையில் புளியந்தோப்பு எட்டாவது பிளாக் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்ற நபர் மூர் மார்க்கெட் பகுதியில் இரும்பு கடையில் வேலை செய்து வந்ததாகவும், மூர் மார்க்கெட் பகுதியில் அதே கடையில் பணிபுரியும் மணிகண்டன் (24) என்ற நபருடன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இருவரும் சேர்ந்து மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ராட்சத உயர் மின்னழுத்த கேபிளை டெலிபோன் கேபிள் என நினைத்து அறுக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது மின்சாரம் பாய்ந்து செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மற்றொரு நபரான மணிகண்டன் என்பவர் 40 சதவீத தீக்காயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பேசன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– யாழன்







