அணு ஆயுதம் தாயரிப்பது தொடர்பாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் நேற்று ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து ஈராக் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஷியா பிரிவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஜம்மு காஷ்மீர், பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகமானது மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு (DGP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஷியா பிரிவு அமைப்புகள் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தூதரகங்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டும் வகையில் உரையாற்றும் “ஈரான் ஆதரவு தீவிரவாதப் பேச்சாளர்களை” (Pro-Iran radical preachers) அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் கண்காணிப்பு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளைக் கண்காணிக்கவும், ஈரான் ஆதரவு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளைத் தீவிரமாக கவனிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்கள், வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.







