பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில் இருக்கிறார் பேரறிவாளன். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உயர் நீதிமன்றம் பல முறை பரோல் தந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றைக் கணக்கில் கொண்டும், பேரறிவாளனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும் நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருக்கு சிறை விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். ‘ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்து, அறிவின் உடல் நிலை உணர்ந்து, நடவடிக்கை மேற்கொண்டு, உடனே விடுப்பு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி’ என்று அவர் தெரிவித்துள்ளார்.







